வாணிய செட்டியாரும் அய்யனாரும்:

பண்டைத் தமிழகம் வணிகம் – நகரங்கள் மற்றும் பண்பாடு என்ற நூலில் “மயிலை, சீனி. வேங்கடசாமி” அவர்கள், கடைச் சங்க காலத்தில் (கி.மு. இரண்டாம் நூற்றாண்டு முதல் கி.பி. இரண்டாம் நூற்றாண்டு வரையில்) ‘சங்க காலத் தமிழர் வாணிகம்’ என்பதை ஆராய்ந்து, பண்டையத் தமிழர் நடத்திய வாணிகத்தைப் பற்றி விளக்குவார். அதில், சிலப்பதிகார நாயகன் கோவலனின் தந்தை ‘மாசாத்துவன்’ என்பவரையும், கோவலனின் மனைவியான கண்ணகியின் தந்தை ‘மாநாய்கன்’ என்பவரையும் குறிப்பிட்டு அவர்களின் பெயர்களுக்கு விளக்கமும் அளித்திருப்பார்.
கோவலனுடைய தந்தை ஒரு பெரிய மாசாத்துவன் (சாத்து – வாணிகச் சாத்து, வாணிகக் குழு, தரை வாணிகக் குழுவுக்குச் சாத்து என்பது பெயர். சாத்து வாணிகன் ஆகையால் மாசாத்துவன் எனப்பட்டான்). அது போன்றே, பல கப்பல்களையுடைய பெரிய கடல் வாணிகருக்கு மாநாவிகர் என்று பெயர் கூறப்பட்டது (நாவிகர் – கப்பலையுடையவர். நாவாய் – கப்பல்). மாநாவிகர் என்னும் சொல் திரிந்து மாநாய்கர் என்று வழங்கப்பட்டது. ஆகையால், கண்ணகியின் தந்தை ஒரு மாநாவிகன் (மாநாய்கன்) எனக் குறிப்பிட்டு, வணிகர்களான மாசாத்துவனும், மாநாய்கனும் அவ்வாறு அழைக்கப்பட்ட காரணத்தையும் சீனி. வேங்கடசாமி விளக்குவார்.
திருப்பூரிலிருந்து 20 கி.மீ தொலைவில் கொடுவாயில் உள்ள நாகீஸ்வரர் கோயிலில் வட்டெழுத்துகளுடன் கூடிய 1,200 ஆண்டுகள் பழைமை வாய்ந்த அய்யனார் சிற்பம் ஒன்று சென்ற ஆண்டின் இறுதியில் (டிசம்பர் 2, 2015 நாளிதழ் செய்தி) “திருப்பூர் வீரராசேந்திரன் தொல்லியல், வரலாற்று ஆய்வு மையத்தின்” தொல்லியல் ஆய்வாளர்களால் கண்டுபிடிக்கப்பட்ட பொழுதும் இதே செய்தி மீண்டும் குறிப்பிடப்பட்டது. தொல்லியல் ஆய்வு மையத்தின் இயக்குநர் பொறியாளர் ரவிக்குமார் அவர்கள், “பண்டைய காலத்தில் தரை வழிப் பயணம் மேற்கொண்டு வணிகம் செய்தவர்கள் சாத்துவர் என்றும் கடல் வழிப் பயணம் மேற்கொண்டு வணிகம் செய்தவர்கள் நாயகர் என்றும் அழைக்கப்பட்டனர். பண்டைய காலத்தில் வணிகம் செய்த வணிகர்கள் தங்களின் காவல் தெய்வமாக அய்யனாரை வழிபட்டனர். அவ்வணிகர்கள் தாங்கள் பயணம் செய்யும் பெரு வழிகளில் அய்யனார் சிலைகளை அமைத்து வழிபட்டு வந்தனர். அந்த வகையில் தமிழகத்தின் பண்டைய பெருவழிகளில் முக்கியமானது முசிறியில் இருந்து சோழர் துறைமுகத் தலைநகரான பூம்புகார் வரையாகும். அதாவது பேரூர், வெள்ளலூர், சூலூர், பல்லடம், காங்கயம், கரூர், உறையூர் வழியாகப் பூம்புகார் வரை இராசகேசரிப் பெருவழி என்று அழைக்கப்பட்டது. இந்த வழித் தடத்தில் கொடுவாயில் உள்ள நாகீஸ்வரர் கோயிலில் வட்டெழுத்துகளுடன் கூடிய அய்யனார் சிற்பம் கண்டறியப்பட்டுள்ளது,” என்று குறிப்பிட்டார்.
வரைபடத்தில் புவியிடக் குறியீடுகள்:
இச்செய்தியில் காணும் தகவல்படி தமிழகத்தில் சாத்தன் மற்றும் அய்யனார் ஆகியவற்றின் தொடர்பு எவ்வாறு அமைந்திருக்கக் கூடும் என்பதை அறியும் பொருட்டு மேற்கொண்ட ஒரு முயற்சியே இக்கட்டுரை. பண்டைய அய்யனார் சிலைகளின் இருப்பிடங்களும், சாத்தன் என்ற பெயரில் தொடங்கும் ஊர்களும் தமிழகத்தில் எந்தெந்த இடங்களில் காணப்படக்கூடும் என்ற தேடல் துவங்கியது.
1. செய்தித்தாள்களில் கிடைத்த “பண்டைய அய்யனார்” சிலைகள் கண்டெடுக்கப்பட்ட இடங்களின் குறிப்புகள் சேகரிக்கப்பட்டன.
2. ‘சாத்தன்’ என்ற பெயர் இடம்பெற்ற ஊர்களின் இருப்பிடங்களைச் சேகரிக்க இந்திய “அஞ்சலக எண்” (Pincode) தரவுகள் மத்திய அரசின் அதிகாரப்பூர்வமான தளத்தில் இருந்து பெறப்பட்டன. Pincode Search – All India Pincode Directory என்ற தளத்தில் (http://www.indiapost.gov.in/PincodeSearch.aspx) இருந்து ஊர்களின் பெயர்களும் அவற்றின் அஞ்சலக எண்களும் சேகரிக்கப்பட்டு பட்டியலிடப்பட்டன.
இப்பட்டியலில் உள்ள ஊர்களில் ‘சாத்தன்’ என்ற பெயருடன் தொடர்புடையவைதான் என்று உறுதியாகத் தெரிந்த ஊர்கள் மட்டும் (சாத்தனூர், சாத்தமங்கலம், சாத்தன்குளம் போன்றவை) தேர்ந்தெடுக்கப்பட்டன. முழுப்பட்டியலும் கல்வெட்டு ஆர்வலர் திரு. சேசாத்திரி சிரீதரன் அவர்களால் பார்வையிடப்பட்டு, தெரிவு செய்யப்பட்ட ஊர்கள் ‘சாத்தன்’ என்ற சொல்லுடன் தொடர்புடையவைதான் என உறுதியளிக்கப்பட்டது. அய்யனார் சிலைகள் கிடைத்த இடங்கள் மிகக் குறைவாகவே இருந்தன. சாத்தன் என்ற பெயருடன் 44 இடங்களும் கிடைத்தன.
1. இந்த இடங்கள் யாவும் ‘கூகிள் மேப்’ (Google Map) வரைபடத் தளத்தில் குறிக்கப்பட்டன. அதனால், அஞ்சலக எண் தரவுகளில் இடம்பெறாத சாத்தன் என்ற ஊர்கள் இடம் பெற வாய்ப்பிருக்கவில்லை
2. இருப்பினும், கூகுள் வரைபடத்தில் இடங்களைக் குறிக்கும்பொழுது மேலும் ‘சாத்தன்’ என்ற பெயருடன் அகப்பட்ட மற்றும் சில ஊர்களும் குறிக்கப்பட்டன
3. கூகுள் வரைபடத்தில் வணிகப் பெருவழிகள் என தொல்லியல் அறிஞர் ஆர். நாகசாமி அவர்களும், பேராசிரியர் ப. பாண்டியராஜா அவர்களும்
(a.) குறிப்பிட்ட இடங்களும், (b.) வணிகவழித் தடங்களும், (c.) அந்த வரைபடங்களில் கொடுக்கப்பட்ட சில முக்கியமான வணிக ஊர்களும், கணவாய்களும் (சிவப்பு நட்சத்திரங்கள்), துறைமுகங்களும் (பச்சை வட்டங்கள்), அகழாய்வில் வணிக ஊராக அடையாளம் காணப்பட்ட இடங்களும் அடிப்படைக் குறிப்புகளாகக் (basic reference points) குறிக்கப்பட்டன
இடங்களும் தடங்களும் குறிக்கப்பட்ட பிறகு கூகுள் வரைபடம் வழி அறிந்து கொண்டவை:
[ஊர்களின் பட்டியலையும், கூகுள் வரைபடத்தையும் பார்வையிடத் தேவையான சுட்டிகள் கட்டுரையின் இறுதியில் இணைக்கப்பட்டுள்ளன]
1. சாத்தன் என்ற பெயர் தமிழ்நாட்டிற்கு மட்டுமே உரியது. தற்கால ஆந்திராவிலும், கர்நாடகாவிலும் ஓரிரு ஊர்கள் அப்பெயரில் இருந்தாலும், சாத்தன் என்பது தமிழ் நாட்டிற்கே உரியது (புத்தரைக் குறிக்கும் ‘சாஸ்தா’ என்பது தமிழில் ‘சாத்தன்’ என வழங்கப்பட்டு பின்னர் புத்தமதத் தொடர்பை அச்சொல் இழந்துவிட்டது என்றும், அக்காலத்தின் பெளத்த சாஸ்தாவின் வழிபாட்டுத் தலங்கள் யாவும் பிற்காலத்தில், ‘தருமராசா கோயில்’, ‘சாத்தனார் கோயில்’, ‘முனீஸ்வரர் கோயில்’ என்று மாறிவிட்டன என்பதும் மயிலை சீனி. வேங்கடசாமி அவர்களின் கருத்து. கடைச்சங்க காலத்தில், தமிழ் நாட்டிலிருந்த பௌத்தர்கள் ‘சாத்தன்’ என்னும் பெயரைப் பெரும்பாலும் மேற்கொண்டிருந்தனர் என்று சங்க நூல்களினின்றும் தெரியவருவதாகவும் மயிலை சீனி. வேங்கடசாமி கூறுகிறார், அதற்குச் சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகியவற்றையும் சான்றுகளாகக் காட்டுகிறார்)
2. மத்திய அரசு வழங்கும் ‘அஞ்சலக எண் தரவுகளில்’ இன்றைய கேரளா பகுதியில் ‘சாத்தன்’ என்ற பெயரில் எந்த ஊரும் கிடைக்கவில்லை. வடமாநிலங்களில் கிடைக்கும் சில ஊர்களின் பெயர்களில் தற்செயலான ஒலிப்பு ஒற்றுமை மட்டுமே இருக்கலாம் என்று அந்த ஊர்கள் வரைபடத்தில் குறிக்கப்படவில்லை (தவிர்க்கப்பட்ட அந்த ஊர்களின் பெயர்களும், அவற்றின் அஞ்சலக எண்களுடன் பட்டியலில் பார்வைக்குக் கிடைக்கும்)
3. இவ்வாறு குறிக்கப்பட்ட இடங்கள் யாவும் பெரும்பாலும் ஆற்றங்கரைகளின் அருகாமையில் அமைந்துள்ளன.
4. அத்துடன், பண்டைய வணிகப் பெருவழிகளாக இருக்கக்கூடும் என்று ஆய்வாளர்கள் குறித்த தடங்களின் வழியிலேயும் அமைந்துள்ளதும் தெரிய வருகிறது.
5. குறிக்கப்பட்ட இடங்களுக்கு இடையே தொடர்புகளை ஏற்படுத்தி வரையப்பட்ட கோடுகள், இக்கால தமிழகத்தின் தேசிய நெடுஞ்சாலைகளின் வழியிலும் அமைந்திருப்பதாகவே தெரிகிறது.
வரைபடத்தில் இடங்களைக் குறிப்பதன் மூலம் (Geospatial data – relating to or denoting data that is associated with a particular location) ஒரு செய்தியைப் பற்றிய புதியக் கோணம் கிடைக்க வாய்ப்புள்ளது. புவியிடக் குறியீடுகள் மூலம் நம் கவனத்திற்கு வந்திராத சில முக்கியத் தகவலும் பார்வைக்குக் கிடைக்கும். இவ்வாறு அறியும் முறை 1854 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் காலரா நோய் பரவிய பொழுது, நோய் பரவிய இடங்களை வரைபடத்தில் (epidemic on maps) குறிக்கும்பொழுது அறியப்பட்டது. ஜான் ஸ்னோ (Dr. John Snow) என்ற மருத்துவரே நோயறியும் வரைபட முறையை முதன் முதலில் மருத்துவத் துறைக்கு அறிமுகப்படுத்தியவர். காலரா நோயாளிகளின் இருப்பிடத்தை லண்டன் மாநகர் வரைபடத்தில் குறிக்கத் தொடங்கிய பொழுது நோய் அதிகம் பரவிய இடம் ஒரு குறிப்பிட்ட குடிநீர்க் குழாய் வழித்தடத்தில் இருப்பதும், குடிநீர் வழி நோய் பரவுவதும் தெரிய வந்து அதற்கு மாற்று வழி கண்டவுடன் நோய் பரவுவது தடுக்கப்பட்டது.
எனவே, அது போலவே தமிழக வரைபடத்தில் ‘சாத்தன்’ என்ற ஊர்கள் அமைந்துள்ள இடங்கள், வணிகப் பெருவழிகளில் அமைந்திருந்த இடத்தைக் குறிப்பால் உணர்த்துகின்றனவா? பயணத்தின் பொழுது வணிகர்கள் அவ்வூர்களைத் தங்குமிடங்களாகப் பயன்படுத்த, அவர்களின் தேவைக்கேற்ப தக்க வசதிகளுடன் அமைக்கப்பட்டிருந்தனவா? அல்லது இந்த அமைவிட அமைப்பு தற்செயலாக அமைந்துவிட்ட ஒரு ஒற்றுமையா? என்பதை மேலும் பல வரலாற்று ஆய்வுகளும் தடயங்களும் இனி வரும் காலத்தில் காட்டக் கூடும். இக்கேள்விகளுக்கு எதிர்காலத்தில் பதில் கிடைக்கக்கூடும்.
பதிவு…
J.K.சந்தோஷ் செட்டியார் BE.,


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக